View status

View My Stats

திங்கள், 14 நவம்பர், 2016

26 மாடுகள்... ஆண்டுக்கு ரூ12 லட்சம் லாபம்! நல்ல பால் தரும் நாட்டு மாடுகள்... - காங்கிரேஜ், கிர்... கால்நடை


ரசாயனங்களால் விளைந்த கேடுகளை மக்கள் உணரத் தொடங்கியதால் இயற்கை விளைபொருட்கள், பாரம்பர்ய அரிசி, காய்கறிகள் போன்றவை குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. அந்த வகையில், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும், சுவையையும் கொண்ட நாட்டுப் பசுக்களின் பால் குறித்த விழிப்பு உணர்வும் அதிகரித்து வருவதால், அதற்கான தேவையும் அதிகரித்து நல்ல சந்தை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தேவையான அளவு உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை. நாட்டு மாடு வளர்ப்பவர்கள், இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்வதற்காகத்தான் பெரும்பாலும் வளர்க்கிறார்களே ஒழிய, பாலுக்காக வளர்ப்பதில்லை. உற்பத்திக்கும் தேவைக்குமான இந்த இடைவெளியைச் சரியாகப் புரிந்துகொண்ட விவசாயிகள் பலரும், தற்போது பாலுக்காக நாட்டு மாடுகளை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், சென்னையைச் சேர்ந்த மார்த்தாண்டன் என்கிற ராஜமார்த்தாண்டன். இவரது பண்ணை காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே சிறுதாவூர் கிராமத்தில் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.வி. சுவாமிநாதனின் பேரன் இவர்.
மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் கொட்டகைக்குத் திரும்பிக்கொண்டிருந்த பிற்பகல் வேளையில் மார்த்தாண்டனின் பண்ணைக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார், மார்த்தாண்டன்.
“எனக்குப் பூர்விகம் சிவகங்கை மாவட்டம்னாலும், படிச்சது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சின்ன வயசிலிருந்தே நாட்டு மாடுகள்னா ரொம்பப் பிரியம். பன்னிரண்டாம் வகுப்புல நான் 93 சதவிகித மார்க் எடுத்தேன். அந்தச் சமயத்துல எங்கப்பா ‘உனக்கு என்ன வேணும்’னு கேட்டாரு. அந்த வயசுல பசங்க பைக் வேணும், செல்போன் வேணும்னுதான் கேப்பாங்க. ஆனா நான், ‘நாட்டு மாடுகள் வேணும்’னு கேட்டேன். அந்தளவுக்கு நாட்டு மாடுகள் மேல ரொம்பப் பிரியம். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடக்குறப்போ அதைப் பார்க்கப் போயிடுவேன். இப்போ, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள்லயும் தொடர்ந்து கலந்துகிட்டிருக்கேன். அதனாலதான், சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியில ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படுற புலிகுளம் மாடுகளையும் நான் தனியா பராமரிச்சுட்டு இருக்கேன்.
பால் உற்பத்திக்காகக் குஜராத் நாட்டுப் பசு மாடுகளையும் இங்கே வளர்த்துட்டு இருக்கேன்” என்ற மார்த்தாண்டன், நறுக்கி வைக்கப்பட்டிருந்த பசுந்தீவனங்களை மாடுகளுக்குக் கொடுத்தவாறே தொடர்ந்தார்.
படித்தது மேலாண்மை... வைத்தது மாட்டுப்பண்ணை!
“பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் ஜாம்ஷெட்பூர்ல இருக்கிற எக்ஸ்.எல்.ஆர்.ஐ. மேலாண்மை கல்வி நிறுவனத்துல 2012-ம் வருஷம் எம்.பி.ஏ படிச்சேன். ஆனா, எங்கயும் வேலைக்குப் போகத் தோணல. விவசாயம், நாட்டு மாடு வளர்ப்புனுதான் ஆசை இருந்துச்சு. இதைச் சொன்னப்போ, வீட்டுல ஒரு மாதிரி பார்த்தாலும், என் விருப்பத்துக்குத் தடை போடலை. நண்பர்கள் சிலரும் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்றதுல ஆர்வமா இருந்தாங்க. அவங்களோட பேசி கீரைச் சாகுபடி செஞ்சு எல்லோரோட கீரையையும் சென்னைக்குக் கொண்டு போய் விற்பனை செய்யலாம்னு திட்டம் போட்டோம்.
எனக்கான நிலத்தைத் தேடினப்போ, இந்த 7 ஏக்கர் நிலம் கிடைச்சது. இது, அப்பாவோட நண்பர் நிலம். எனக்கு நாட்டு மாடுகள் குறித்துத் தெரியுங்கிறதால, 2013-ம் வருஷம் கீரைச் சாகுபடியோடு, மாட்டு வளர்ப்பையும் ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல தார்பார்க்கர், சாஹிவால், காங்கிரேஜ்னு கறவைக்குப் பேர் போன வடமாநில மாடுகள வாங்கிட்டு வந்து வளர்த்தேன். இதுல காங்கிரேஜ் இன மாடுகள்தான் எனக்கு ஏத்ததா இருந்துச்சு. அடுத்து கிர் மாடுகளை வாங்கினேன். அதுவும் எனக்கு ‘செட்’ ஆச்சு. இப்போ, 18 காங்கிரேஜ் மாடுகள், 8 கிர் மாடுகள் இருக்கு. இதோடு 12 கன்னுக்குட்டிகள் இருக்கு. ரெண்டு குதிரைகளும் வெச்சிருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ குதிரை வண்டியில் சவாரி கிளம்பிடுவேன்” என்ற மார்த்தாண்டன் தொடர்ந்தார்.
பராமரிப்புக் குறைவு!
“நாட்டு மாடுகளுக்குப் பராமரிப்பு ரொம்பக் குறைவுதான். ஆனா, கறவைக்குனு வளர்க்கற நாட்டு மாடுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுக்கணும். எந்தளவுக்குப் பசுந்தீவனமும், அடர்தீவனமும் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு அதிகமான பாலும், வளமான கன்னுக்குட்டிகளும் கிடைக்கும். ஒவ்வொரு மாட்டுக்கும் பால் கொடுக்கும் திறன் வித்தியாசப்படும். செறிவான தீவனம், அதிகப்படியான பராமரிப்புனு கவனிச்சா காங்கிரேஜ் மாடு ஒரு நாளைக்கு அதிகபட்சமா 15 லிட்டர் வரை பால் கொடுக்கும். கிர் மாட்டுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமா 18 லிட்டர் வரை பால் கொடுக்குற திறன் உண்டு.
இப்போ எங்கிட்ட இருக்கிற காங்கிரேஜ் மாடு ஒருநாளைக்கு 10 லிட்டர் வரைக்கும், கிர் மாடு 12 லிட்டர் வரைக்கும் பால் கொடுத்திட்டு இருக்கு. இந்த அளவு, மாட்டுக்கு மாடு வித்தியாசப்படும். நான் வாங்கிட்டு வர்ற மாடுகள் சரியா பால் கொடுக்கலைனா அதை மாத்திடுவேன். அப்படி ஒவ்வொரு மாடா மாத்தி... நல்லா பால் கொடுக்கிற மாடுகளை மட்டும்தான் பண்ணையில வெச்சிருக்கேன். அப்படித் தேர்வு செஞ்சு நிப்பாட்டுனதுதான் இந்த 26 மாடுகள்.
நாட்டு மாடுகளுக்கு மேய்ச்சல்தான் பிரதானம். பண்ணையைச் சுத்தியிருக்கிற 70 ஏக்கர் நிலத்துல மேய்ஞ்சிட்டு வந்திடும். பக்கத்திலேயே வனத்துறைக்குப் பாத்தியப்பட்ட புதர்க்காடுகள் இருக்கு. அதோட 2 ஏக்கர்ல தீவனச்சோளம் போட்டிருக்கேன். அதையும் வெட்டி, தீவனம் நறுக்கும் கருவியால நறுக்கி கொடுத்திடுவோம். கறவை மாடுகளுக்கும், சினை மாடுகளுக்கும் அடர்தீவனம் கொடுப்போம். மாடுகளுக்காக பண்ணையில் 6 பேர் வேலை செய்றாங்க” என்ற மார்த்தாண்டன் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
“மொத்தம் இருக்குற 26 மாடுகள்ல 12 மாடுகள் கறவையில இருக்கு. ஒரு நாளைக்குச் சராசரியா 100 லிட்டர் பால் கிடைக்கிது. 50 லிட்டர் பாலை சென்னையில இருக்கிற இயற்கை அங்காடிகளுக்கு ஒரு லிட்டர் 75 ரூபாய்னு விற்பனை செய்றேன்.
50 லிட்டர் பாலை நேரடியா ஒரு லிட்டர் 85 ரூபாய்னும் விற்பனை செய்றேன். அதுமூலமா ஒரு நாளைக்கு 8 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிது. இதுல, சம்பளம், தீவனம், குத்தகைத் தொகை, பேக்கிங், போக்குவரத்துனு மொத்தமும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கிது. மாசம் 90 ஆயிரம் ரூபாய்ங்கிற கணக்குல ஒரு வருஷத்துக்குனு கணக்கு பார்த்தா 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபம்.
வருஷத்துக்கு 10 கன்னுக்குட்டிகளை விற்பனை செய்றது மூலமா 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கிது. மொத்தமா வருஷத்துக்கு 12 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லாபமா எடுத்துட்டு இருக்கேன்” என்ற மார்த்தாண்டன் நிறைவாக, “சாணம், சிறுநீரை வெச்சுதான் ஜீவாமிர்தம் தயாரிச்சு கீரைக்கும், தீவனப்பயிருக்கும் கொடுக்கிறேன். இப்போ கீரை அறுவடையில இல்ல. பொதுவா, மக்களுக்கு ‘ஆர்கானிக் பால்’ குறித்துத் தெரிஞ்ச அளவுக்கு ‘நாட்டு மாட்டுப் பால்’ குறித்துத் தெரியலை. இன்னமும் அதுகுறித்த விழிப்பு உணர்வு வரணும். அதேமாதிரி நாட்டுமாடுகள்ல எடுத்தவுடனே வருமானம் கிடைச்சிடாது. மாடுகள் நம்ம பண்ணையில ‘செட்’ ஆகுற வரை பொறுமையா விடா முயற்சியோட இருக்கணும். முதலீடு செய்யவும் யோசிக்கக் கூடாது. நான் வேலைக்குப் போயிருந்தா எனக்கு இந்தளவு சம்பளம் கிடைச்சிருக்குமானு தெரியலை. ஆனா, கண்டிப்பா மன நிம்மதி கிடைச்சிருக்காது. இப்போ எனக்குப் பிடிச்ச மாடுகளோட பிடிச்ச வேலையை சந்தோஷமா செஞ்சுட்டிருக்கேன்” என்று சொல்லி மகிழ்ச்சியோடு விடை கொடுத்தார்.
தொடர்புக்கு, மார்த்தாண்டன், செல்போன்: 98414 11170.
________________________________________
மாடு வாங்குபவர்கள்... கவனம்!
இவர் குஜராத் மாநில கிராமங்களில் தேடி பிடித்துதான் மாடுகளை வாங்கி வருகிறார். அங்கேதான் ஒரிஜனல் ரகங்கள் கிடைக்கின்றன. ஒரு மாட்டை வாங்கி, லாரி மூலம் இங்கே கொண்டு வருவதற்கு காங்கிரேஜுக்கு 60 ஆயிரம் ரூபாயும், கிர் மாட்டுக்கு 75 ஆயிரம் ரூபாயும் செலவாகிறது. காங்கிரேஜ் மாடுகள் வெள்ளை, கறுப்பு நிறங்களில் இருக்கும். காங்கிரேஜுக்கு மடி உள்வாங்கி இருக்கும். கிர் மாட்டுக்கு... சிவப்பு மச்சம், சிவப்பில் வெள்ளை மச்சம்; பெரிய காதுகள்: பக்கவாட்டில் சரிந்த கொம்புகள்; பெரிய மடி காம்புகள் இருக்கும். இங்கேயே நிறைய பேர் கலப்பில்லாத நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார்கள். நம்பிக்கை அடிப்படையில் அவர்களிடமும் வாங்கலாம். காங்கிரேஜ் மாடுகளில் போலிகளை எளிதாகக் கண்டறிய முடியும். ஆனால், கிர், சாஹிவால் இன மாடுகளில் கண்டறிவது கடினம். அதனால் புதிதாக வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
________________________________________
பட்டி முறையில் கொட்டகை!
(Loose Housing System)
“மாட்டுக்கான கொட்டகையை மூணு பங்கு திறந்த வெளி இருக்குற மாதிரியும் ஒரு பங்கு கூரையால் அடைத்த பகுதியா இருக்குற மாதிரியும் அமைச்சிருக்கேன். 50 அடிக்கு 30 அடி அளவில் கொட்டகை இருக்கு. திறந்தவெளிப் பகுதியில் மாடுகள் நடமாட முடியும். மாடுகள் தீவனத்தை எடுக்க வசதியா தீவனத் தொட்டிகளை வரிசையா அமைச்சிருக்கேன். இரும்பு வேலி அமைச்சு ரெண்டு ரக மாடுகளையும் தனித்தனியாகப் பிரிச்சு வெச்சிருக்கேன். தீவனம் எடுக்கும்போது மாடுகள் நிழல்ல இருக்கும். மற்ற நேரங்களில் விரும்புற இடத்துல மாடுகள் படுத்துக்கும்” என்றார், மார்த்தாண்டன்.
________________________________________
நாட்டு மாட்டுப் பால் ஒரு வாரம் வரை கெடாது!
மாடுகள் பராமரிப்பு குறித்துப் பேசிய மார்த்தண்டன், “விடியற்காலை 5.30 மணிக்கு பால் கறந்துடுவோம். 6.30 மணிக்கு கறவையில் இருக்குற மாடுகளுக்கு ரெண்டரை கிலோ அடர்தீவனம் கொடுப்போம் (கோதுமைத் தவிடு, உளுந்துப் பொட்டு, கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, சோளம் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்து தயாரித்த அடர்தீவனம்). சினை மாடுகளுக்கு அரைக் கிலோ அடர்தீவனம் கொடுப்போம். 10.30 மணிக்கு மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். சாயங்காலம் 3.30 மணிக்கு மேய்ச்சல் முடிஞ்சு மாடுகள் பண்ணைக்கு வந்திடும். வந்தவுடன் தண்ணி காட்டுவோம்.
5 மணிக்கு காலையில கொடுத்த அளவு அடர்தீவனம் கொடுப்போம். 5.30 மணிக்கு பால் கறந்துடுவோம். எப்பவும் பால் கறக்குறப்போ, ஒரு காம்பில மட்டும் பால் கறக்க மாட்டோம். அது கன்னுக்குட்டிக்கு. ராத்திரி 7 மணிக்கு ஒரு மாட்டுக்கு 10 கிலோ அளவுல பசுந்தீவனம் கொடுப்போம். நாட்டு மாடுகளுக்கு நோய்த் தாக்குதல் குறைவுதான். அப்பப்போ வர்ற மடி நோய், காம்புல வர்ற புண்களுக்கு இயற்கை மருத்துவம் செஞ்சுக்குவோம். பாலைக் கறந்து 1 லிட்டர் பாக்கெட் போட்டு, ஃப்ரீஷர்ல வெச்சிடுவோம். அப்படி வெச்சிட்டா ஒரு வாரம் வரைக்கும் பால் கெடாது” என்றார்.
________________________________________
தீவனம் நறுக்கும் கருவி
பண்ணையில் தீவனம் நறுக்கும் கருவியை பயன்படுத்தி வருகிறார் மார்த்தாண்டன். இதுகுறித்து அவர் பேசும்போது, “இது பிரேசில் நாட்டு தீவனம் நறுக்கும் கருவி. இத பெங்களூர்ல பண்ணைக் கருவிகள விற்பனை செய்ற நிறுவனத்துக்கிட்ட வாங்கினேன். இந்த கருவி மூலமா ஒரு மணி நேரத்துல 1 டன் தீவனத்தை நறுக்க முடியும். அதாவது 50 மாடுகளுக்கான தீவனத்த வெட்டலாம். ரெண்டு மணி நேரத்துல 100 மாடுகளுக்கான தீவனத்த வெட்டிக் கொள்ளலாம்.
இந்த கருவியில பொருத்தியிருக்குற தீவனம் நறுக்கு பிளேடு உயர்தரத்துல இருக்குறதால, அடிக்கடி பிளேடை சாணை பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த கருவி மின்சாரத்துல இயங்கக்கூடியது. இத ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். இப்போ இந்தியாவிலேயே இதே தரத்துல 50-60 ஆயிரம் ரூபாய் விலையில கிடைக்குது. பத்துக்கும் மேல மாடுகள் வெச்சிருவங்களுக்கு இந்த கருவி பொருத்தமாக இருக்கும்” என்றார்.
________________________________________
இந்தியாவின் பழைமையான மாட்டினம்!
தேசிய விலங்குகள் நல மரபணு ஆதார அமைப்பு இந்தியாவில 30க்கும் மேற்பட்ட நாட்டு மாட்டு இனங்களை அடையாளப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது. மூன்று பிரிவுகள் இருக்கிறது. கறவைக்கான ரகங்கள், உழவுக்கான ரகங்கள், உழவு மற்றும் கறவைக்கான ரகங்கள் என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். கறவைக்கான ரகங்களில் சாஹிவால், கிர், தார்பார்க்கர், காங்கிரேஜ், ரதி, சிவப்பு சிந்தி இருக்கு. குஜராத் மாநிலத்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ரகம் காங்கிரேஜ். இந்தியாவின் பழைமையான மாட்டு இனங்களில் காங்கிரேஜும் ஒன்று. இந்தியாவின் மன்னர்கால நாணயங்களில் காங்கிரேஜ் மாட்டின் கொம்புப் பகுதியை உருவமாக பதித்துள்ளனர். குஜராத்தோட தெற்குப் பகுதியைச் (சௌராஷ்டிரா) சேர்ந்த ரகம் கிர் மாடுகள். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக