View status

View My Stats

புதன், 29 ஜூலை, 2015

நோய்களைத் தடுக்கும் தாய்ப்பால்!


கஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் மகத்துவம் பற்றியும், தாய்ப்பால் தொடர்பான விழிப்பு உணர்வுத் தகவல்களையும் வழங்குகிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் இரா.நளினி.
‘‘குழந்தை பிறந்த முதல் இரண்டு நாட்களில் தாய்க்கு சுரக்கும் சீம்பால் கொழுப்பு, புரதம், விட்டமின் சத்துகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, சளி, நோய்த்தொற்று ஏற்படாது என்பதுடன், வளர்ந்ததும் சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய் போன்றவையும் ஏற்படுவதில்லை.
சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், மனச்சோர்வு, அதிக உடல் எடை போன்றவை வராமல் இருப்பதுடன் தாய்க்கும் சேய்க்கும் இடையில் பிணைப்பு அதிகமாகும்.
அமர்ந்த நிலையிலோ அல்லது சாய்ந்தவாக்கில் படுத்த நிலையிலோ தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழித்தால் மட்டுமே குழந்தை சரியான முறையில் பசியாறுகிறது எனக் கொள்ளலாம்.
 
தாய்ப்பால் சுரக்க சரிவிகித உணவுடன் வெள்ளைப்பூண்டை சேர்த்துக் கொள்வது அவசியம். தாயின் பால்சுரப்பு குழந்தைக்குப் போதவில்லை எனில், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இன்னும் சில பிரத்யேக உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பிரஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து, இரண்டு நாட்கள் வரை கூட குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குழந்தைக்குப் புகட்டலாம். அப்படி வைக்கப்பட்ட பாலை ஒரு பாத்திரத்தில் வைத்து அதை வெந்நீர் கொண்ட மற்றொரு பாத்திரத்துக்குள் வைத்து, குளிர்ச்சி அடங்கி இயல்பான சூட்டுக்கு பால் வந்ததும், குழந்தைக்குக் கொடுக்கலாம்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு காம்பு புண்ணானால்... வெதுவெதுப்பான நீரில் கழுவுவதுடன், லோஷன் மற்றும் எண்ணெய் தடவலாம்.
மார்பகங்களில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு பால் கட்டி வலி ஏற்பட்டால் வெந்நீர் அல்லது பனிக்கட்டியை தேய்த்து பாலை பீய்ச்சி எடுப்பது உடனடி தீர்வைத் தரும்.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் தருவதே, குழந்தைக்கு ஆரோக்கியமான வளர்ச்சி தரும். புட்டியில் பால் கொடுப்பது நோய்த் தொற்றை உருவாக்கும் என்பதால், தவிர்க்க வேண்டும்’’.

வியாழன், 23 ஜூலை, 2015

மகத்தான லாபம் தரும் குமிழ் மரம் வளர்ப்பு

குமிழ் மரத்தின் விஞ்ஞானப் பெயர் மெலைனா அர்போரியா ஆகும். இது வெர்பினேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. ஜெர்மானிய அறிவியல் அறிஞர் ஜோஹான் ஜார்ஜ்மேலைன என்பவரை நினைவூட்டும் வகையில் மெலைனா என்ற முதற்பெயரை கொண்டது. அர்போரியா என்பது மரத்தைப் போன்றது எனப் பொருளாகும். குமிழ்மரத்தின் தாயகம் பாரசீகமாகும்.இம்மரம் பொதுவாக இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் ஸ்ரீலங்கா, பர்மா, பங்களாதேசம், தென்சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.நம் நாட்டில் இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை தவிர மற்ற பகுதிகளில் காணப்படுகிறது. ஈரச் செழிப்பான பகுதிகளில் வேகமாக நன்கு வளர்கிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையாக வளர்கிறது. தற்பொழுது தமிழகம் முழுவதும் தனியார் நிலங்களில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
குமிழ் பயிரிட நிலம் :
குமிழ்மரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் வரை உள்ள நிலப்பகுதிகளிலும் 25c-40c வரை வெட்ப நிலையில் உள்ள எல்லா பகுதிகளிலும் நன்கு வளர்கிறது. இம்மரங்களை நீர்பாசன வசதியுள்ள நிலப்பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மற்றும் வரப்புகளிலும் வளர்க்கலாம். இம்மரம் வடிகால் வசதியுள்ள ஆழமான மண் வளமுள்ள வண்டல்மண், செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண்ணில் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர் வடியா நிலங்களும் இம்மர உற்பத்திக்கு உகந்ததல்ல.
பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் :
குமிழ் மரங்கள் நட்ட ஆறு ஆண்டுகளில் பூக்கத் தொடங்கினாலும் நன்கு பூக்க 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஜுன் ஆகஸ்ட் மாதங்களில் பூக்கத் தொடங்கி ஏப்ரல்-ஜுன் மாதங்களில் விதைகள் முற்றி பழமாக கீழே விழ ஆரம்பிக்கும். பொதுவாக குமிழ் மரங்களில் நன்கு காய்பிடிக்கும். 15 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக 1 மரத்திற்கு 10 கிலோ குமிழ் விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் சராசரியாக 2000 குமிழ் விதைகள் இருக்கும்.
விதை சேகரம் :
விதைகளை நன்கு நேராக வளர்ந்து 15 வயதிற்கு மேற்பட்ட குமிழ் மரங்களிலிருந்து ஏப்ரல்-ஜுலை மாதங்களில் சேகரிக்கலாம் பழங்கள் முட்டை வடிவத்தில் இருக்கும். அவைகள் பழுத்து தானாகவே மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். பழங்களில் பழுப்பு நிற பழங்களை மட்டும் சேகரித்து 4-5 நாட்கள் வரை குவித்து வைத்து சதைப்பகுதியை நன்கு அழுக விட வேண்டும். அழுகிய கனிகளைப் பிசைந்து கொட்டைகளைக் கழுவி 2-3 நாட்கள் உலர வைக்க வேண்டும். மேலும் இவ்விதைகளில் தரமான விதைகளை மட்டும் பொறுக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்இ
விதையின் முளைப்புத் தன்மை இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும். முளைப்பு திறன் சுமார் 50 சதவீதமாகும். விதையை 24 மணிநேரம் வரை நீரில் ஊற வைத்து விதைநேர்த்தி செய்து விதைப்பது நன்று. ஒரு கிலோ எடையில் சுமார் 2000 விதைகள் இருக்கும்.
நாற்றங்கால் :
10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 30 செ.மீ உயரமுள்ள தாய்பாத்தி அமைக்க வேண்டும். கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாய்பாத்தியின் மீது வேம்பு பால் கரைசலை நன்றாக தெளிக்க வேண்டும். ஒரு அங்குல கனத்தில் குறு மணலை தாய்பாத்தியின் மீது பரப்ப வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட குமிழ் விதைகளை ஒரு தாய்பாத்திக்கு 5 கிலோவீதம் விதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் விதைக்க வேண்டும். குமிழ்விதையின் கனத்திற்கு சலித்த செம்மண் மற்றும் மணல் கலந்த கலவையை தாய்பாத்தியின் மீது தூவி விடவேண்டும். அதன் பின்பு தாய்பாத்தியின் மீது வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி விடவேண்டும்.
தாய்பாத்தியின் மீது 15 நாட்களுக்கு பூவாளி மூலம் காலை மாலை இரு வேளை நீர்ஊற்ற வேண்டும். பின்பு 30 நாட்களுக்கு பூவாளி மூலம் தினமும் ஒரு வேளை நீர் ஊற்ற வேண்டும். குமிழ்விதைகள் 10-12 நாட்களில் முளைக்க ஆரம்பித்துவிடும். இந்நிலையில் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றுகளை தாய்பாத்தியிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.
செம்மண், வண்டல் மண், மணல் மற்று நன்கு மக்கிய தொழு உரத்தை தனித்தனியாக சல்லடையில் சலித்து நன்றாக கலந்துவிட வேண்டும். அதனோடு 1 பாலித்தீன் பைக்கு (13X25) செ.மீ அல்லது (16X30) செ.மீ. அளவு பாலீத்தின் பைகள்) 6 கிராம் அசோஸ்பைரில்லம், 6 கிராம் பாஸ்போ பேக்டீரியம், 15 கிராம் வேம் மற்றும் 35 கிராம் அளவிற்கு மண்புழு உரத்தை நன்கு கலந்துவிடவேண்டும். இம்மண் கலவையை (13X25) செ.மீ. அளவுள்ள பாலீத்தின் பைகள் அல்லது (13X30) செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும். நாற்றங்காலில் கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேம்பு பாலை நன்கு தெளிக்க வேண்டும்.
மண் கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளை 10மீX1மீ அளவுள்ள நிலையான பாத்திகளில் அடுக்கி வைக்க வேண்டும். தாய்பாத்தியில் குமிழ் நாற்றுகள் முளைத்து நான்கு இலைகள் வந்ததும் அவைகளை வேர்கள் சேதாரம் இல்லாமல் எடுத்து ஒவ்வொரு பாலித்தீன் பைக்கும் ஒரு செடிவீதம் நடவு செய்ய வேண்டும். தாய்பாத்தியில் முளைத்த தரமான இளங்கன்றுகளை மட்டும் எடுத்து பாலித்தீன் பைகளில் நடவு செய்தல் வேண்டும். பின்பு பாலித்தீன் பைகளில் நடவு செய்யப்பட்ட குமிழ்கன்றுகளுக்கு 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். பின்பு 30 நாட்களுக்கு தினமும் ஒரு வேளை பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். பின்பு 60 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். இதன் பின்பு வாரத்திற்கு இருநாள் நீர் ஊற்றுவது போதுமானது. மழைபெய்யும் நாட்களில் நாற்றுகளுக்கு நீர் விடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இடமாற்றம் செய்து தரம்பிரித்து அடுக்குதல் :
பாலித்தீன் பைகளில் விதைகள் முளைத்து 45வது நாள் பைச் செடிகளை இடமாற்றி தரம் பிரித்து அடுக்க வேண்டும். அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்தி விடவேண்டும். பின்பு 21 நாட்களுக்கு ஒரு முறை பை நாற்றுகளை இடமாற்றம் செய்து தரம் பிரித்து அடுக்க வேண்டும். மேலும் நாற்றங்காலில் நீர் தேங்கமால் பார்த்துக்கொள்ள வேண்டு்ம். நாற்றங்காலை சுகாதாரமான முறையில் பராமரித்தால் பூச்சி தாக்குதல் மற்றும் இதரநோய்கள் வருவதை கட்டுப்படுத்தலாம். பை நாற்றுகள் ஆரோக்கியமாக நன்கு வளர பஞ்சகாவ்யா கரைசலை 1 லிட்டருக்கு 30 மி்.லி. வீதம் கலந்து நாற்றங்கால் எழுப்பப்பட்ட 60 நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
தோட்டம் உற்பத்தி :
நான்கு மாத காலத்தில் குமிழ் நாற்றுகள் சுமார் 75 செ.மீ-1மீ உயரத்திற்கு வளர்ந்திருக்கும். இதுவே நடுவதற்கு உரிய சமயமாகும். நாற்றுகள் நடவு செய்ய வேண்டிய இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். நிலம் சமமாக இருப்பின் ஒரு சால் ஏர் உழுத பின்பு ஒரு ஏக்கர் பரப்பில் 5மீ X 5மீ இடைவெளியில் 45 செ.மீ X 45 செ.மீ X 45 செ.மீ அளவில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் முதல் மழையில் 160 குழிகள் எடுக்க வேண்டும். பின்பு செம்மண் மற்றும் வண்டல் மண் சம பங்கு கலந்து அத்துடன் 250 கிராம் கோழி உரம் அல்லது 2 கிலோ தொழு உரம் கலந்து எல்லா குழிகளிலும் பாதி அளவு நிப்பி விட வேண்டும் . ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பருவ மழை கிடைத்தவுடன் பைசெடிகளை பாலித்தீன் பைகளை அப்புறப்படுத்திவிட்டு குழிகளில் நடவு செய்யவேண்டும். குழிகளின் மீதி பகுதியை குழிகளில் சுற்றியுள்ள மேல் மண்ணை கொண்டு நிரப்பி செடிகளை சுற்று இறுக்கமாக கால்களால் மண்ணை மிதித்துவிட வேண்டும்.
நாற்றங்காலில் பூச்சி தாக்குதலும் நிர்வகித்தலும் :
நாற்றங்காலிலுள்ள குமிழ்மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி, புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் குமிழ் நாற்றுகளின் தளிர்களையும், இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்களான அஸ்வினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒருசில குமிழ் நாற்றுகள் வாடி கருகிவிடும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த “என்டோசல்பான்” பூச்சிக்கொல்லியை 1லி நீரில் 10 ம.லி. கலந்து கைத்தெளிப்பான் மூலம் நாற்றுகளில் மீது அடித்தால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும். மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தகசாவ்யா அல்லது வேம்புபால் அல்லது புகையிலை மற்றும் வேம்பு சோப்பு கரைசலை 1லிட்டர் தண்ணீரில் 30 மி.லி வீதம் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் நாற்றங்காலில் நீர்தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும்பட்சத்தில் குமிழ்நாற்றுகளுக்கு வாடல் நோய் மற்றும் அழுகல் நோய் உண்டாகும். இந்நோய்களை கட்டுப்படுத்த பிளேன்டோமைசின் 0.1% என்னும் மருந்தை மண்ணின் வேர்பகுதிக்கு அருகே ஊற்ற வேண்டும்.
தோட்ட பராமரிப்பு : (Maintenance of Plantation)
குமிழ்மரக்கன்றுகள் நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு 15செ.மீ ஆழம் வரை மண்ணை கொத்தி களை எடுக்க வேண்டும். செடிகள் நன்குவளர மாதம் இருமுறை நீர் விடுவது அவசியமாகும். ஆறுமாதத்திற்கு ஒருமுறை தொழுஉரம் இட்டு செடிகளை சுற்றி கொத்தி களை எடுப்பதன் மூலம் செடிகள் நன்கு வளரும். இவ்வாறு தொடர்ந்து தோட்டம் உற்பத்தி செய்த ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் வரை பராமரிப்பு பணி மேற்கொண்டால் குமிழ்கன்றுகள் நன்கு வளர்ந்து மரமாகும்.
வேளாண்காடு வளர்ப்பு :
குமிழ் மரத்தோட்டத்தில் வேளாண் பயிர்களான சோளம், பருத்தி, நிலக்கடலை, மஞ்சள், உளுந்து, தட்டைபயிறு, கொள்ளு மற்றும் காய்கறிகள் போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னை மற்றும் வாழை போன்றவைகளையும் ஊடுபயிராக பயிரிடலாம்.
தோட்டம் எழுப்புவதற்கான செலவு :
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 160 குமிழ் மரக்கன்றுகளை நடப்படும். இதற்கான சாகுபடி செலவு பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளது.
பராமரிப்பு செலவு : முதலாமாண்டு பராமரிப்பு :
மகசூல் சேகரம் மற்றும் வருவாய் :
குமிழ்மரத் தோட்டத்தை நன்கு பராமரிக்கும் பட்சத்தில் மரங்கள்ச சிறப்பாக வளர்ந்து பத்தாண்டு காலத்தில் சுமார் 120 செ.மீ சுற்றளவுடன் 15மீ உயரம் வரை வளர்கிறது.
ஒரு ஏக்கரில் 160 குமிழ்மரங்களின் மூலம் கிடைக்கும்.
மகசூல் 0.33 மெ.டன் / 1 மரம் 52.80 மெ.டன்
வருவாய் 52.80 மெ.டன் @ ரூ.9200/- மெ.டன் – ரூ 4,85,760.00
சராசரியாக ஓராண்டு வருவாய் – ரூ 48,576.00
மரப்பயன்பாடு :
குமிழ்மரத்தின் இலை, தழைகள், கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும். இம்மரம் தீப்பெட்டி, தீக்குச்சி, ஒட்டு பலகை மற்றும் மரக்கூழ் தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் மேஜை, நாற்காலிகள், ஜன்னல்கள், நிலைக்கதவுகள், பலகைகள், பெட்டிகள் மற்றும் தோலக் என்ற இசைக்கருவி செய்ய குமிழ்மரம் பயன்படுகிறது. பூக்களில் அதிக தேன் உள்ளதால் இம்மரத்தோப்புகளில் தேனீக்கள் வளர்த்து உபரி வருமானம் பெறலாம்.
மருத்துவ பயன்கள் : 
குமிழ் மர இலைச்சாறு சிறுநீரக கோளாறு, வெள்ளைப்படுதல், வெட்டை மற்றும் இருமலுக்கு நிவாரணியாக பயன்படுகிறது. தலைவலியை நீக்க குமிழ் இலையை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போடலாம். குமிழ் மரப்பூக்கள் இரத்தம் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன, குமிழ் மரவேர்கள் பசியை தூண்டவும், பெண்களுக்கு பால்பெருக்கியாகவும், மலமளிக்கியாகவும், புத்தி பேதலித்தல் மற்றும் வலிப்பு நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் காய்ச்சல், அஜீரண கோளாறு, வெள்ளைப்படுதல் ஆகியவற்றிற்கு வேரின் கஷாயம் மருந்தாக பயன்படுகிறது.
மேலும்  தகவலுக்கு:
தமிழ்நாடு அரசு வனத்துறை
வனவியல் விரிவாக்கப் பிரிவு
சென்னை – 600 048.

‘வறண்ட நிலம் வாழ வைக்குது மரம்

வர்ணிக்கிறார் வனராஜா
‘‘முப்பத்தைந்து ஆண்டுகள் காடுகளிலும், மலைகளிலும் அலைந்து, திரிந்து தமிழகத்துக்கு ஏற்ற லாபம் தரும் மர வகைகளை தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறபோகிறேன். அதற்குள் என் மனதுக்குள்ளும், வனத்துறை தோட்டத்திலும் வளர்ந்திருக்கும் அந்த அற்புதமான மரங்களைப் பற்றி மக்களுக்குச் சொல்லவேண்டும். கொஞ்சம் வரமுடியுமா?’’ என்று நமக்கு அழைப்பு விடுத்தார் தமிழக வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் டாக்டர். குமாரவேலு ஐ.எஃப்.எஸ் தொடர்புக்கு (அலைபேசி94449-09737).
கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில், 65-வது கிலோ மீட்டரில், விரிந்து கிடக்கிறது விளாம்பூண்டி வன ஆராய்ச்சி மையம். நிலம் வறண்டு கிடந்தாலும் பசுமைக்கட்டி வரவேற்றன மரங்கள். அங்கே நம்மிடம் பேச ஆரம்பித்தார் குமாரவேலு.
‘‘இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக வறட்சி நிலவும் மாநிலம் தமிழ் நாடுதான். எனவே, கிடைக்கின்ற மழைநீரை வைத்து லாபகரமாக விவசாயம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்தப் பயிர் செய்தாலும் லாபம் இல்லை. பூச்சி, நோய் மருந்து என்று பிரச்னைகள் தான் வேகமாக வளர்கின்றன. சக்திக்கு மீறிய நஷ்டத்தைச் சந்திப்பவர்கள், 'விவசாயமே வேண்டாம்' என்று நகரத்துக்கு வேலை தேடிப்போகிறார்கள். நகரத்தில் தஞ்சம் புகுந்து விட்ட முன்னாள் விவசாயக்குடும்பம், தற்போது பல்லாயிரக்கணக்கில் சம்பாதிக்கிறது. ஒரு காலத்தில் கடனாளியாக இருந்த சக விவசாயி, பட்டணத்தில் பிக்கல், புடுங்கல், இல்லாமல் வாழ்வதைப் பார்த்து, அந்த ஊரில் உள்ள மற்ற விவசாயிகளும் பட்டணத் துக்குப் போகிறார்கள். நாளுக்குநாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது. விவசாயிகள் உழைப்பதற்குத் தயாராக இருந்தபோதும், உரிய விலை இல்லை என்பதால்தான் வெறுத்து ஒதுங்குகிறார்கள். அவர்களை மீண்டும் செல்வாக்குடன் விவசாயம் செய்து வாழவைக்கும் சக்தி, மரம் ஒன்றே ஒன்றுக்குத்தான் உண்டு! இரண்டரை ஏக்கர் வைத்துள்ள விவசாயி, ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறத்தக்க மரப்பயிர்களின் கன்றுகளை வனத்துறையில் வைத்திருக்கிறோம். அவற்றை இலவசமாகவே விவசாயிகளுக்குத் தருகிறோம்.
வறட்சியான இந்தப் பகுதியை தேர்ந்தெடுத்து ஆராய்ச்சிக்காகவே மரங்களை வளர்த்து வருகிறோம். சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் செஞ்சந்தனம், பீயன்மரம் (தீக்குச்சி), மலை வேம்பு, குங்குலியம் போன்றவை வளர்ந்து கிடக்கின்றன. அனல்காற்று வீசுமளவுக்கு வறக்காடு இது. இப்படிப்பட்ட நிலத்தில் மரங்களை வளர்த்துக் காட்டினால், இதைப் பார்த்தாவது மானாவாரி நிலத்தில் தைரியமாக மரங்களை நட விவசாயிகள் முன்வருவார்கள் என்றுதான் இந்த இடத்தை தேர்வு செய்தோம். நாங்கள் திட்டமிட்டபடியே இவை வளர்ந்து நிற்கின்றன'' என்று பெருமை பொங்கச் சொன்ன குமாரவேலு, ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்திருக்கும் வரட்டுப்பள்ளம் கிராமத்தில் உள்ள வன ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
''மர வகைகளில் அற்புதமானது மூங்கில். உலகில் வேகமாக வளரக்கூடிய தாவரம் ஒன்று உண்டு என்றால் அது மூங்கில்தான். இங்கே முதலில் மூங்கிலைத்தான் பார்க்கப்போகிறோம். முள் உள்ள மூங்கிலை அறுவடை செய்வதற்கு விவசாயிகள் படாதபாடு படுகிறார்கள். இதற்கு மாற்றாக, 1990-ம் ஆண்டு முள் இல்லாத மூங்கில் ரகத்தை வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரவழைத்தோம். அங்கு சென்று தமிழகத்துக்கு ஏற்ற 5 வகைகளை மட்டும் தேர்வு செய்தோம். பரிசோதனை முறையில் பயிரிட்டுப் பார்த்தோம். நல்ல லாபம் கிடைத்தது. இதையடுத்து, மூள் இல்லாத மூங்கிலை பயிரிடச் சொல்லி விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம். ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்துக்கும் மேல் விவசாயிகள் வருமானம் எடுத்து வருகின்றனர்'' என்றபடியே ஆராய்ச்சி மையத்துக்குள் அழைத்துச் சென்றார்.
திரும்பிய பக்கமெல்லாம் சிறிதும், பெரிதுமாக மரங்கள் வளர்ந்து நிற்க, தன்னைச்சுற்றிலும் பஞ்சு மெத்தை போட்டதுபோல காய்ந்த இலைகள் கிடக்க, ஜம்மென்று நின்றுகொண்டிருந்தன மூங்கில்கள்.
‘‘நடவு செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. 5 அடிக்கு 5 இடைவெளியில் இந்த மூங்கில்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. 160 குத்துகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 40 மூங்கில்களுக்கு குறை வில்லாமல் இருக்கின்றன. நான்காம் ஆண்டு முதல் ஒவ்வொரு குத்தில் இருந்தும் 10 மூங்கில்கள் வீதம் அறுவடை செய்யலாம். ஒரு மூங்கில் 10 முதல் 20 கிலோ இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 16 டன் மூங்கில்கள் கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி டன் ரூ.3ஆயிரத்துக்கு விலை போகிறது. 48 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் கிடைத்தால் கூட அது நல்ல வருமானம்தான். ஏனென்றால்... இதற்கான முதலீடு மிகவும் குறைவு. மழை நீர் மூலம்தான் இது வளர்கிறது. உரம், பூச்சி மருந்து செலவில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் பாதுகாத்து வந்தாலே போதும். நீர் பாசனம், நல்ல பராமரிப்பு என்று பார்த்துப் பார்த்துச் செய்தால் கூடுதல் லாபம் பார்க்க முடியும்.
பாம்புசா டுல்டா, பாம்புசா பால்குவா, பாம்புசா நிடன்ஸ், பாம்புசா வல்காரீஸ் போன்ற மூங்கில் ரகங்களை பயிரிடச் சொல்கிறோம். பாம்புசா பாலிம் மரப்பா, பாம்புசா ஒலிவேரி போன்ற ரகங்கள் மிக வேகமாக வளர்ந்து லாபம் கொடுக் கின்றன’’ என்று சொன்னவர், அப்படியே அருகிலி ருந்த சவுக்கு தோட்டத்துக்குள் நுழைந்தார்.
‘‘கடுமையான வறட்சியின்போது கூட இந்த சவுக்கு மரம் சாகவில்லை. இதற்குக் காரணம் இது சாதாரண சவுக்கு அல்ல. இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்த ஜூங்கினியானா ரகம்.
இந்தோனேஷியாவின் கப்பாளங்-குப்பாங், திமுர் போன்ற இடங்களில் மிக வேகமாக வளரக்கூடிய சவுக்கு மரவகைகள் இருப்பதைக் கேள்விப்பட்டோம். ஆஸ்திரேலியாவில் உள்ள கேன்பராவில் இருக்கும் அரசு விதைப் பண்ணை களில் இதற்கான செடிகள் கிடைக்கும் என்று தெரிந்து, 1997-ம் ஆண்டு அவற்றை வரவழைத்தோம். முதலில் ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அவற்றைப் பயிரிட்டோம். கூடவே நாட்டு சவுக்கு மரங்களையும் நட்டோம். மறந்தும் கூட எதற்கும் தண்ணீர் ஊற்றக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தேன். வறட்சியைத் தாங்காமல் நாட்டு சவுக்குக் கன்றுகள் ஓராண்டுக்குள் இறந்து விட்டன. ஆனால், ஜுங்கினியானா சவுக்கு மட்டும் ஜம்மென்று வளர்ந்து நின்றது.
வறட்சி, உப்பு நீர், களர் நிலம் என்று எதிலும் வளரும் தன்மை கொண்ட சவுக்கு, இன்றைக்கு மிகப்பெரிய மரியாதை பெற்று நிற்கிறது. சவுக்கு மரம் பயிரிடும் விவசாயிகளை, காகித ஆலைகள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன. இரண்டு அடிக்கு இரண்டு அடி இடைவெளியில் ஏக்கருக்கு 1,000 மரங்கள் நடலாம். 4-ம் ஆண்டு அறுவடை செய்யலாம். 60 டன் கிடைக்கும். இன்றைய நிலவரப்படி டன் 3 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதன்படிப் பார்த்தால் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இதைப் பற்றி வீட்டில் சொல்லிக் கொண்டி ருந்தபோது, 'அந்த ஆளு டுபாக்கூர் விடறான்னு சொல்லிடப் போறங்க' என்று என் மனைவி கிண்டல் செய்தார். இப்போது வாயடைத்து நிற்கிறார்'' என்று நிறுத்திய குமாரவேலு,
''அடுத்தபடியாக, ஒரு கதாநாயகியை அறிமுகப் படுத்தப்போகிறேன். அதுவும் சாதாரண கதாநாயகி அல்ல... லட்சம் லட்சமாக குவிக்கும் மாபெரும் கதாநாயகி...'' என்றபடியே நடந்தார்.
''யார் அது?'' என்று வியப்போடு பின்தொடர்ந்தோம்.
அடுத்த இதழில்...
தைலமர எச்சரிக்கை
கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ள குளவியால் தற்சமயம் தைல மரத்தில் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு இஸ்ரேல் நாட்டில் உள்ள அத்தனை மரங்களும் அழிந்துவிட்டன. இப்போது இந்தியாவில் காணப்படுகிறது. பெரும்பாலும் விதையில்லாமல் உருவாக்கப்படும் தைல மரங்களில் தான் இதன் தாக்குதல் அதிகமாக உள்ளது. விதையின் மூலம் உருவாக்கப்பட்ட கன்றுகளை இந்த நோய் தாக்குவதில்லை. எனவே தைலமரம் பயிரிடும் போது கவனம் தேவை.
ஸ்ட்ராவில் சவுக்கு
குளிர்பானம் குடிக்க பயன்படும் ஸ்ட்ராவை பயன்படுத்தி சவுக்கு கன்றுகள் உற்பத்தி செய்யும் முறையை டாக்டர். குமாரவேலு கண்டறிந்துள்ளார். ஒரு ஸ்டாரவை இரண்டாக வெட்டி அதில் மண் நிரப்பப்படுகிறது. இதில் மெல்லிய சவுக்கு கன்றுகள் நடப்படுகின்றன. ஒரு பிளாஸ்டிக் டிரேவில் மணல் கொட்டப்பட்டு அதில் நீர் விடப்படுகிறது. மண்ணில் உள்ள நீர் மேலேற்றும் விசையின் மூலம் ஸ்டிராவில் உள்ள சவுக்கு கன்றுகளுக்கு கிடைக்கின்றது. இந்த எளிய முறையில் இந்தோனேஷிய கன்று உற்பத்தி செய்ய 25 பைசாதான் செலவாகும்.

57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்...


வியக்க வைக்கும் விழுப்புரம் ஜீரோ பட்ஜெட் பண்ணை!மகசூல் காசி. வேம்பையன் படங்கள்: தே. சிலம்பரசன்
ளைக்காமல் பணி ஆற்றிய விவசாயத் தொழிலாளர்கள் பலரும், வெவ்வேறு வேலைகளின் பக்கம் ஒதுங்கி வருவதால், விவசாயம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு 100 நாள் வேலைத்திட்டம் வேறு, தொழிலாளர்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, அதளபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது, நிலத்தடி நீர். இவ்வளவையும் தாண்டி விவசாயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது 'மரம் வளர்ப்பு’தான்! அந்த நம்பிக்கையில், பழ மரங்கள், தடி மரங்கள் என வளர்த்து, கலக்கலாக வருமானம் பார்த்து வருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சுந்தரம்.
விழுப்புரம்-செஞ்சி சாலையில் பதினான்காவது கிலோ மீட்டரில் இருக்கும் கஞ்சனூர் கிராமத்திலிருந்து வலதுபக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, தென்பேர் கிராமம். இங்கேதான் இருக்கிறது, சுந்தரத்தின் சோலைக் காடு. மலைச்சாரல் மழை போல தூறிக் கொண்டிருந்த ஒரு காலை நேரத்தில் அந்தச் சோலைக்குள் நுழைந்தோம். குடை பிடித்துக்கொண்டே மரங்களைச் சுற்றிக் காட்டினார், சுந்தரம்.
''சொந்த ஊர் பாண்டிசேரி பக்கத்துல இருக்குற தவளக்குப்பம். அப்பா பாண்டிச்சேரி முதல்வருக்கு பி.ஏ.வா இருந்தார். சின்னக் குழந்தையில இருந்தே விவசாயம் பிடிக்கும். காலேஜ் முடிச்சுட்டு சொந்த ஊர்ல இருந்த 30 ஏக்கர்ல விவசாயம் பார்த்துக்கிட்டே, தனியார் கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தேன். 92-ம் வருஷம் அப்பா 'ரிட்டையர்டு’ ஆன பிறகு, அவரும் விவசாயத்துக்கு வந்து, நெல், கடலை, தென்னை, மரவள்ளினு சாகுபடி செஞ்சார். எங்க ஊர்ல, வேலை ஆட்கள் பிரச்னையால சரியா விவசாயம் பார்க்க முடியலை. அதனால, 18 ஏக்கர் நிலத்தை வித்துட்டோம். அதுக்கப்பறம், நான் வேலையை உதறிட்டு, வேலையாள் பிரச்னை இல்லாத இடமா தேடி அலைய ஆரம்பிச்சு... இந்த ஊர்ல
33 ஏக்கர் நிலம் வாங்கி, கடலை, காராமணி, மரவள்ளினு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.
இங்கயும் கொஞ்ச நாள்லயே, தண்ணி பிரச்னை வந்துடுச்சு. அந்த சமயத்துல, பெரியகுளம், தோட்டக்கலைக் கல்லூரியில முதல்வரா இருந்த, சம்பந்தமூர்த்திகிட்ட பேசுனப்போ... 'நெல்லி, சப்போட்டா, மா மாதிரியான பழ மரங்களை வெச்சா, வேலை ஆட்களோட தேவையும் குறையும். குறைஞ்ச தண்ணீரை வெச்சும் சமாளிச்சுடலாம்’னு சொன்னார். அதுக்குப் பிறகு, 12 ஏக்கர்ல நெல்லி, 6 ஏக்கர்ல சப்போட்டா, வேலி ஓரத்துல 1,500 தேக்குனு நடவு செஞ்சுட்டு, மீதி நிலத்துல வழக்கமான சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். ஓரளவுக்கு வேலையாட்கள் தேவையும், தண்ணீர் தட்டுப்பாடும் கட்டுக்குள் வந்துச்சு. நாலு வருஷத்துல நெல்லியும், அஞ்சு வருஷத்துல சப்போட்டாவும் காய்க்க ஆரம்பிச்ச பிறகு, மீதம் இருந்த நிலத்துல எல்லாம், மா, எலுமிச்சை, தென்னைனு நட்டுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த சுந்தரம் தொடர்ந்தார்.
வழிகாட்டிய பாலேக்கர்!
''பழ மரங்கள் வருமானம் கொடுக்கறதைப் பாத்ததும், 'இந்த மண்ணுல மர வகைகள் நல்லா வளரும்’னு எனக்குப்பட்டது. என்ன மரங்களை வைக்கலாம்னு தேடிகிட்டிருந்தப்போதான், 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுல பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள், என்னை ஈர்த்துச்சு. அவரோட பயிற்சியிலயும் கலந்துகிட்டேன். மர சாகுபடி செய்யுற பண்ணைகள் பலதுக்கும் போய், அந்த விவசாயிகளோட அனுபவங்கள உள் வாங்கிக்கிட்டேன். கோயம்புத்தூர், வன மரபியல் ஆராய்ச்சி நிறுவன பயிற்சியில மர வகைகள், பலன் கொடுக்குற காலம், சந்தை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்.
அதுக்கப்பறம்தான், பழ மரங்களுக்கு இடையில குமிழ், மலைவேம்பு மரங்களை நட்டேன். சில இடங்கள்ல அடியில பாறை இருந்ததால இந்த மரங்கள் சரியா வரல. அதனால, வேங்கை, மகோகனி, சிகப்பு சந்தனம், ரோஸ்வுட், பூவரசு, காட்டுவாகை, சிலவாகை, இலவம்பஞ்சு மாதிரியான மரங்களை நட்டிருக்கேன். எல்லா மரங்களுக்கும் மேட்டுப்பாத்தி அமைச்சு, சுத்திக் கிடக்குற இலைதழைகளை மரத்துக்கிட்ட தள்ளி விட்டுடுவேன். அந்த இலைகள் மட்கி, நிறைய மண்புழு உருவாகிட்டதால... இப்ப உழவே ஓட்டுறதில்லை. எல்லாத்தையும் மண்புழுக்களே பாத்துக்குது. எல்லாமே பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் மகத்துவம்தான்!
57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்!
கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல கிடைச்ச நிலங்களை வாங்கினதுல இப்போ மொத்தம் 57 ஏக்கர் இருக்கு. 15 ஏக்கர்ல 900 மா, 12 ஏக்கர்ல 2 ஆயிரம் நெல்லி, 12 ஏக்கர்ல 1,300 சப்போட்டா, 6 ஏக்கர்ல 700 தென்னை, 2 ஏக்கர்ல 400 எலுமிச்சை; 200 சாத்துக்குடி, 4 ஏக்கர்ல 450 கொய்யா, 6 ஏக்கர்ல பல வகையான தடி மரங்கள்னு வெச்சுருக்கேன். பழமரங்களுக்கு இடையிலயும், தனியாகவும் 1,900 தேக்கு மரங்கள் இருக்கு. இதுல 1,500 மரங்கள் வேலிப்பயிர். இதுக்கு 9 வயசாகுது. ஊடுபயிரா 1,100 மகோகனி, 400 மலைவேம்பு, 3 ஆயிரம் வேங்கை, 700 குமிழ், 150 தீக்குச்சி, 150 பூவரசு, 60 காட்டுவாகை, 250 இலவம், 600 சிகப்பு சந்தனம், 300 ரோஸ்வுட், 150 சிலவாகை மரங்கள்னு கிட்டத்தட்ட 16 ஆயிரம் மரங்கள் இருக்குது. இதுபோக, 1,200 செடிமுருங்கை, 500 அகத்தியும் இருக்கு'' என்ற சுந்தரம், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
செலவை ஈடுசெய்யும் பழ மரங்கள்!
''இப்போதைக்கு நெல்லி, சப்போட்டா, மா மட்டும்தான் காய்ப்பில் இருக்குது. நெல்லி மூலமா வருஷத்துக்கு 5 லட்சம் ரூபாய்; மாங்காய் மூலமா வருஷத்துக்கு
2 லட்சம் ரூபாய்; சப்போட்டா மூலமா வருஷத்துக்கு 3 லட்சம் ரூபாய்னு வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்குது. இந்த வருமானம்... நிர்வாகச் செலவுக்கு சரியாயிடுது. இன்னும் மூணு, நாலு வருஷத்துல எல்லா பழ மரங்களும் காய்க்க ஆரம்பிச்சு... எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யா, இளநீர் மூலமாவும் வருமானம் வர ஆரம்பிக்கும். அப்போ, எல்லா செலவும் போக, பழங்கள் மூலமா ஒரு ஏக்கர்ல இருந்து மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். தடிமரங்களைப் பொறுத்தவரை, எல்லா ரகங்கள்லயும் சேர்த்து, மொத்தம் 7 ஆயிரத்து 260 மரங்கள் இருக்கு. இது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விலைக்குப் போகும். 10 வருஷம் கழிச்சு, கொஞ்ச மரங்களையும் 20 வருஷம் கழிச்சு கொஞ்ச மரங்களையும் விக்கிறப்போ கோடிக்கணக்குல வருமானம் வரும்னு எதிர்பாக்குறேன்'' என்று மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார், சுந்தரம்.
தொடர்புக்கு, சுந்தரம், 
செல்போன்: 84891-91774.

பழ மரங்களுக்கு இடையில் பயன்தரும் மரங்கள்!
மர வகைகளை சாகுபடி செய்வது பற்றி, சுந்தரம் சொல்லும் தொழில்நுட்பங்கள்-
''மரக்கன்றுகளை நடவு செய்யும் நிலத்தில் களை இல்லாத அளவுக்கு உழவு செய்து கொள்ள வேண்டும். மேட்டுப்பகுதி நிலத்தில் ஆடி மாதத்திலும், பள்ளமான பகுதிகளில், தை மாதத்திலும் நடவு செய்ய வேண்டும்.
18 அடிக்கு 18 அடி இடைவெளியில் நெல்லி; 30 அடிக்கு 30 அடி இடைவெளியில் மா;
22 அடிக்கு 22 அடி இடைவெளியில் சப்போட்டா; 14 அடிக்கு 14 அடி இடைவெளியில் கொய்யா; 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி; 22 அடிக்கு
22 அடி இடைவெளியில், தென்னை என ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளி வித்தியாசப்படும்.
இரண்டரை அடி சதுரம், இரண்டரை அடி ஆழத்துக்குக் குழி எடுத்து ஒரு மாதம் ஆறப்போட்டு... அதில், ஒரு கூடை எரு இட்டு செடிகளை நடவு செய்ய வேண்டும். இரண்டு பழ மர வரிசைகளுக்கு இடையில், தேக்கு, மகோகனி, சிகப்பு சந்தனம், மலைவேம்பு ஆகியவற்றை 8 அடி இடைவெளியிலும்; வேங்கை, பெருமரம், ரோஸ்வுட் ஆகியவற்றை 10 அடி இடைவெளியிலும்; காட்டுவாகை, பூவரசு, இலவு ஆகியவற்றை 15 அடி இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.
இந்த மரங்களுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் வரை பயறு வகைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இதன் மூலம் மரத்துக்குத் தேவையான தழைச்சத்துகள் கிடைப்பதோடு, வருமானமும் கிடைக்கும். பழ மரங்களுக்கு கவாத்து தேவையில்லை. தடி மரவகைகளை
10 ஆண்டுகள் வரை கவாத்து செய்ய வேண்டும். இதை மட்டும் செய்து வந்தாலே... உங்கள் நிலம் 'காடு’ போல மாறி, பறவைகள், விலங்குகள் எனத் தோட்டம் முழுக்க உயிர்ச் சூழல் பண்ணையாகி விடும்.''

திங்கள், 20 ஜூலை, 2015

ரூ.300 முதலீட்டில் ரூ.30 லட்சம் வருமானம்: அசத்தும் 'வத்தல் தாத்தா'!

'வத்தல் தாத்தா' யாரென கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் அளவுக்கு மதுரை, செல்லூர் வட்டாரத்தில் டி.பி.ராஜேந்திரன் மிகவும் பிரபலம். காரணம், இவரது திருப்பதி விலாஸ் வத்தல் கம்பெனி.

78 வயதான ராஜேந்திரன் இந்த வயதிலும், இளைஞர்களைப் போன்று சுறுசுறுப்பாக உழைத்து வருகிறார். தினமும் காலை 4 மணிக்கு காய்கறி சந்தைகளில் ஆரம்பமாகும் இவரது வேலைகள், இரவு கம்பெனி வரையிலும் தொடர்கிறது. வத்தல் போடுவதற்கான சுண்டைக்காய் வாங்குவதற்காக, ஆந்திரா, பென்னாகரம், சத்தியமங்கலம், மிதுக்கங்காய்க்கு விளாத்திகுளம், மாங்காய்க்கு பெரியகுளம், மற்ற காய்கறிகளுக்கு மாட்டுத்தாவணி, பரவை என பம்பரமாய் சுற்றுகிறார்.
இன்று ஆண்டுக்கு கிட்டதட்ட ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கும் இவரது இளமை காலம் அவ்வளவு இனியதாக அமைந்து விடவில்லை. ஐந்தாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு, விருதுநகர் தால் மில்லில் மாதம் 25 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வந்திருக்கிறார். அந்த காலக் கட்டங்களில் தான் இவருக்கு வியாபரத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதை ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. அந்த எண்னமே திருமணம் ஆன பிறகு அவரை குடும்பத்தோடு மதுரைக்கு வழி அனுப்பி வைத்திருக்கிறது. மதுரைக்கு வந்த சில வாரங்களில் 300 ரூபாய் முதலீட்டில் செல்லூரில் சிறிய மளிகைக்கடை ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.
இவரது கடுமையான உழைப்பின் காரணமாக, வியாபரம் ஒருகட்டத்தில் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து, காய்கறிகளும் விற்பணை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதில் சில காய்கள் விற்காமல் மிச்சமாகவே, அவற்றை என்ன செய்யலாம் என அவர் யோசித்ததின் விளைவு தான் இந்த வத்தல் கம்பெனி.

தனது கடையில் மிச்சமாகும் காய்கறிகளை காய வைத்து, அவற்றை வத்தல்களாக உருவாக்கி, 1 பாக்கெட் 10 காசுகள் என விற்பனை செய்ய ஆரம்பித்திரக்கிறார். வத்தல் தயாரிப்பில் இவரது மனைவியும், இவருடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். இருவரின் கடுமையான உழைப்பின் காரணமாக, மளிகைக்கடை வியாபாரத்தை விட வத்தல் வியாபாரம் நல்ல இலாபத்தை ஈட்டி தர ஆரம்பித்திருக்கிறது.
1965ல் வத்தல் தயாரிக்கும் கம்பெனியாக ஆரம்பிக்கபட்ட 'திருப்பதி விலாஸ்'க்கு இப்போது பொன் விழா ஆண்டு. 80களில் இவரும் இவரது மனைவியும் புது வகையான வத்தல்கள் மற்றும் வடகங்களை உருவாக்கினர். இவர்களது வத்தல் தயாரிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்கையில் தான், இந்த துறையில் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகம் என்பதை உணர்ந்துள்ளார். நம் மாநில வியாபாரிகளும் கூட வெளிமாநிலத்த்வர்களிடம் இருந்து வத்தல்கள் வாங்குவதை கண்டு மிகவும் கவலையுற்று, நம்மூர் வியாபாரிகள் மட்டுமல்லாது, வெளி மாநில வியாபாரிகளும் கூட தன்னிடம் தான் வத்தல்கள் வாங்க வேண்டும் என சபதம் எடுத்துள்ளார்.
வடமாநிலத்தவர்கள் வத்தல் வியாபாரத்தில் வித்தகர்களாக இருப்பதற்கான காரணம் அவர்களிடம் இருக்கும் மெஷினர்களே என்பதை அறிந்து, 2005ஆம் வருடம் குஜராத்தில் இருந்து மெஷின்கள் வாங்கியிருக்கிறார். வேறு மாநிலம் மட்டுமல்லாது, வேறு நாட்டு வத்தல், வடகம், அப்பள வகைகளையும் உண்டு சுவையறிந்து, பொருளறிந்து செய்முறை அறிந்து தானாகவே தயாரித்திருக்கிறார். இன்று மாங்காய், முந்திரி, கத்திரி, வெண்டை, வெங்காயம் என 30 வகையான வத்தல்களையும், கார்ன், மக்கா, மீல்மேக்கர், மக்ரோனி போன்றவற்றையும் டன் கணக்கில் நம்மூர் வியாபாரிகளும், வட மாநிலத்தவர்களும் வாங்கி செல்கின்றனர்.
'தொழிலார்கள் தான் இந்த கம்பெனியின் உயிர், அவர்கள் இல்லையேல் இந்த கம்பெனி இல்லை' என கூறும் ராஜேந்திரன், ஆண்டுக்கு இருமுறை தனது ஊழியர்களை விமானங்களில் சுற்றுலா அழைத்து செல்கிறார். கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வத்தல், வடகம், அப்பளம் தயாரிக்க பயிற்சியும் கொடுத்து வருகிறார்.
''வத்தல் தயாரிப்பு தொழிலுக்கு சுறுசுறுப்பு, பருவநிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் சமயோச்சித புத்தி, தயாரிப்பில் சுத்தம் ஆகிய மூன்றும் தான் பிரதான தகுதி'' என்கிறார்.

இன்றைய இளம் தொழில் முனைவோர்களுக்கு வாழும் எடுத்து காட்டாய் திகழும் இந்த இந்த 'வத்தல் தாத்தா' ஓர் 'அசத்தல் தாத்தா' தான்.
நன்றி - விகடன்

புதன், 15 ஜூலை, 2015

மனைவிகளின் முதல் எதிரி !

மீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். டீ கொடுத்த நண்பரின் மனைவி, ''அண்ணே, இந்த ஒலகத்துலேயே நான் வெறுக்கிற ஒரே விஷயம் என்ன தெரியுமாண்ணே?'' என்றார். நான் சிரித்துக்கொண்டே அவரைப் பார்க்க, பதிலுக்கு அவர் கொஞ்சம்கூட புன்னகைக்காமல் ''செல்போன்!''என்றார். ''ஏன்?'' என்றேன். ''சாயங்காலம் ஆபீஸ் விட்டு வந்ததும் அந்த செல்போனை நோண்ட ஆரம்பிச்சிடுவார். டி.வி பார்க்கிறது, சாப்பிடறது, புக் படிக்கிறதுனு என்ன வேலை செஞ்சாலும், செல்லு கையோடயே தான் இருக்கும். அப்பப்போ அதை எடுத்துப் பாத்துக்கிட்டே இருப்பார். தூக்கம் சொக்குற வரைக்கும் அதுதான் கதி. அப்படியும்கூட, சார்ஜ் போட்டு அவர் கைக்கு எட்டும் தூரமா வெச்சுக்குவார். காலையில அது முகத்துலதான் முழிப்பார். பாத்ரூமுக்கும் எடுத்துட்டுப் போவார். ஆபீஸுக்கு கிளம்பும்போது நாம அவர் காதோடதான் பேசலாம். செல்லை நோண்டிக்கிட்டே நம்மள நிமிந்துகூடப் பாக்காமதான் பதில் சொல்லுவார். வீட்டுல நான் தனியாத்தானே கிடப்பேன்... என்ன, ஏதுன்னு எங்கிட்ட ஒரு வார்த்தை பேசுறதில்ல...''  பொருமித் தீர்த்தார் விரக்தியும் வெறுப்புமாய்!
இது ஏதோ ஒரு நண்பனின் மனைவியின் கூற்று அல்ல. இன்று செல்போனும், அதில் இணைய இணைப்பும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இத்யாதிகளும் என கணவர்கள் பொழுதைக் கழிக்க, நடுத்தரவர்க்கத்து மனைவிகளுக்கு அது தரும் மனத்தளர்வு நிறைய. செல்போனில் உடனுக்குடன் செய்திப் பரிமாற்றம், கருத்து களை எந்தவிதத் தயக்கமுமின்றி பதிவிடும் சுதந்திரம், இணையப் புரட்சி மூலம் ஒரு நாட்டின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கலாம் என்பதெல்லாம் சரிதான். ஆபீஸ் டென்ஷன், வீட்டு டென்ஷன்களை சற்றே மறக்க ஒரு ரிலாக்ஸேஷன் தளமாக இருக்க வேண்டிய கருவிக்கு, பல ஆண்களும் அடிமையாகிப் போனதுதான் துயரம். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது, அந்த அடிமைகளின் மனைவிகள்தான்.
அந்தப் பெண், எனக்கு தங்கை முறை. அவர் கணவருக்கு அலுவலக வேலை மாலை 6 மணிக்கே முடிந்துவிடும். ஆனால், அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்புவது இரவு 10 மணிக்கு. காரணம், அலுவலகத்தில் முகநூலில் நண்பர்களுடன் பேசி, கருத்துகள் பரிமாறி, புரட்சி செய்து களைத்து, பின்னர் அவர் வீடு திரும்ப நள்ளிரவாகிவிடும். என்றோ ஒருநாள் அல்ல, இதுதான் வாடிக்கை. ''நானும் பிள்ளைங்களும் படுத்து தூங்கிடுவோம். 11 மணிக்கு காலிங்பெல் அடிக்கிறவர்கிட்ட, ஏன் லேட்?’னுகூட இப்போவெல்லாம் கேட்கிறதில்ல. காலையில பழையபடி அவசர அவசரமா கௌம்பிப்போகத்தான் சரியா இருக்கும்...''  துயரம் தொண்டையை அடைக்கப் பேசிய தங்கைக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. முகநூலில் பல நண்பர்களுடன் பல விஷயங்களைப் பேசும் கணவனுக்கு, தன் மனைவியிடம் பேச எதுவுமில்லாமல் போனது துயரமே!
இன்னொரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் மனைவி சொன்னதுதான் நறுக் சுருக்’... ''ஆமா, இவரு காலையில 4 மணிக்கு எல்லாருக்கும் குட்மார்னிங் சொல்லாட்டி அவங்களுக்கு விடியாது பாருங்க!'' விடியும் முன்னே கணவர் படுக்கையில் அமர்ந்தபடி தனது ஆண்ட்ராய்டு மொபைலில் ஊர் உலகத்துக்கு குட்மார்னிங் டைப் பண்ணுவதைப் பார்க்கும் எந்த மனைவிக்கும் எரிச்சல் வரத்தானே செய்யும்.
பெரும்பாலும் மிடில்கிளாஸ் இல்லத்தரசிகளுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்றால் என்னவென்று தெரிவதில்லை. அவற்றை, ஏதோ தன் கணவனைத் தன்னிடமிருந்து பிரித்துவிடும் மாயசக்தியாகப் பார்க்கிறார்கள். சில பெண்களுக்கு புரிந்தும் புரியாமலே இருக்கின்றன. தன் கணவனுக்கு முகநூலில் ஏராளமான நண்பர்கள் என்றாலே அது அந்த மனைவிகள் வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைப்பதாகவே இருக்கிறது. இன்னொரு நண்பரின் மனைவி சொன்னது அதை உறுதிபடுத்துகிறது. அவர் குழந்தை, சிறு விபத்தில் சிக்கி மீண்டபோது செய்தியினைக் கேள்விப்பட்ட அவரின் முகநூல் நண்பர்கள் அவருக்கு போன் செய்து விசாரித்திருக்கிறார்கள். இதில் முக்கால்வாசி வெளிநாட்டிலிருந்து வந்த விசாரிப்பு. ''அதாண்ணே எனக்கும் பயமா இருக்கு. அவங்க ஒலக ஃபேமஸா இருக்கட்டும். அவங்க ஃப்ரெண்ட்ஸா இருக்குற பொண்ணுங்க போட்டோவை எல்லாம் பார்த்தா... என்னை விட்டுப் போய்டுவாங்களோன்னு மனசைக் கலக்குது!''
இணையம் இந்த பயத்தை பல மனைவிகளுக்குத் தந்திருக்கிறது.
''ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டு இந்த செல்லுல அப்படி என்னதான் பார்க்கிறாரு? பொண்டாட்டி, புள்ள மொகத்த நிமிந்து பாக்காம, பேசாம, ராத்திரி ஒருவேளை ஒண்ணா உக்காந்து சாப்பிடும்போதுகூட அந்த எழவ நோண்டிக்கிட்டே இருக்கிற அளவுக்கு, அப்படி அதுல என்னதான் இருக்கு? அதை தூக்கி வீசினாதான் வருவேன்!'' என்று அம்மா வீட்டுக்கே சென்றுவிட்டார் ஒரு நண்பரின் மனைவி. அந்தளவுக்கு அவருக்குப் புறக்கணிப்பு, அவமானம், தனிமை, தாழ்வுமனப்பான்மையைத் தந்திருக்கிறது அவர் கணவரின் கைப்பேசி.
வாட்ஸ்அப்பில் குழு குழுவாகப் பொழுதுபோக்கி, முகநூலில் முன்பின் அறியாதவர்களுக்கு எல்லாம் வாழ்த்துகளும், ஆறுதல்களும் சொல்லும் கணவன்மார்கள், வீட்டில் அத்தனை பொறுப்புகளையும் தலையில் சுமக்கும் தங்கள் மனைவிகளின் உழைப்புக்கு கொஞ்சம் நன்றிசொன்னால் என்ன? அவர்களின் சிரமங்களுக்கு ஆறுதல் சொன்னால் என்ன? அட, அதைக்கூட அவர்கள் கேட்கவில்லை. 'வீட்டுக்கு வந்தா, அந்தக் கருமத்தை ஓரங்கட்டி வெச்சுட்டு, எங்ககிட்ட பேசணும்!’  இதைவிட ஓர் அடிப்படை உரிமை உலகத்தில் இல்லை.
இறுதியாக... என் நெருங்கிய நண்பன் ஒருவனின் மொபைல் பழுதாகிவிட்டது. அவன் பிறந்த நாள் பரிசாக ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்கித்தரலாம் என்று அவனிடம் கேட்டேன். ''நீ எனக்கு செல்போன் வாங்கித் தந்தா, 'எப்பப் பார்த்தாலும் செல்லும் கையுமா’னு என் மனைவி திட்டும்போதெல்லாம், 'இதவாங்கிக்கொடுத்தாரு பாருங்க... அவரைச் சொல்லணும்’னு உன்னையும் சேர்த்துத்திட்டுவா... பரவாயில்லையா?!'' என்றான்.
மனைவியின் மிகத் தீவிர எதிரியை, பல கணவர்களும்பாக்கெட்டில் சுமந்துகொண்டுதான் திரிகிறார்கள்!

நன்றி - விகடன்

வெள்ளி, 10 ஜூலை, 2015

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்

யற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைந்த பின் படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம். அதிகாலை கண் விழிப்பதும், இரவு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வதும்தான் சிறந்தது. நாம், காலங்காலமாக இந்த இயற்கை நியதியைப் பின்பற்றிவந்ததால்தான், முன்பு நமக்கு தொற்றுநோய்த் தாக்குதல்களைத் தவிர, மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பெரிய அளவில் இல்லாமல் இருந்தன. இன்று, இரவில் நீண்ட நேரம் விழிப்பதும் பகலில் நெடுநேரம் கழித்து எழுவதும் சகஜமாகிவிட்டதால், நம் மூளையில் இருக்கும் மன சுழற்சிக் கடிகாரம் (Circadian rhythms) இயற்கையின் விதிகளுக்குப் புறம்பாக மாறிவிட்டது. அதிகாலை எழுவதால் ஏற்படும் பலன்களைத் தெரிந்துகொண்டால், நாமும் இயற்கையோடு இணைந்து ஏராளமான நன்மைகளைப் பெற முடியும்
மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.
மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன? அவற்றில் எதனை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.
உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் பசி எடுக்கும். காலையில் சாப்பிடுவதால், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். மேலும், இரவு 9-10 மணிக்குள் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.
காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனைச் சுவாசித்தால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னைகள் வராது. அதிகாலை 4.30 – 5.30 மணிக்குள் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வதுஉடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.

அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம், சிறுநீர் கழிந்து, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். உடல் நலனுக்கு மட்டுமல்ல. மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.